அசரீரி


இப்படித்தான் ஒருநாள் சங்கரய்யர்  என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்.

ஏன் இப்போதெல்லாம் யாருக்கும் அசரீரி அதாவது ஆகசவானி அல்லது வானொலி (சென்னை, திருச்சி, பண்பலை அல்ல)  கேட்பதில்லை?

 அதானே? ஏன்?

அப்பதான் தயங்கி தயங்கி தன் அனுபவத்த பகிர்ந்துகிட்டார்.

ஆழ்ந்த உறக்கம்னு இருக்கலாம். ஆனா முழிச்சிண்டுதான் இருக்கேனான்னும் தெரியல. திடீரென்று ஒரு பரவச நிலை பர பர வென்கிறது உடலெங்கும்..ஏதோ மொன மொன வென ஒரு குரல்..உத்து கேட்டதில்
”ஏய் இனிமே இப்படியேதாண்டா வாழ்க்க உனக்கு” அப்படின்னு சொல்லித்து அந்த குரல். எனக்கு அப்படியே ஸ்வாதிஷ்டானத்திலிருந்து கிளம்பி மணிபூரகத்திலிருந்து அனாகதம் வரை எதோ ஒன்று ஓடறது  போல இருந்தது. டப் டப் என ஒரு சத்தம் வேற. ரோட்டில் நடந்தோ அல்லது பைக்கிலோ போகும்போது சரேலென்று மயிரிழையில் லாரியோ பஸ்ஸோ போனால் தூக்கிவாரிப்போடும் பாருங்கோ அப்போ  இதயத்தின் ஒலி துல்லியமாக் கேட்க்கும்...அப்படி கேட்டது. ஒரு வேளை இதுதான் சிர்காடியன் ரிதமோ? இல்லை உருவமே இல்லாது குரல் மட்டுமே.  பாத்ரூம் கண்ணாடியில் கை கழுவி உதரும் போது சிதரும் நீரும், பல்தேய்க்கும் போது சாறலாக பொழியும்  பற்பசை நுரையும் படிந்து மசமசவென மங்கலாக ஷேவிங் செய்யும் போது மிக இடைஞ்சலாக இருக்குமே அப்படி ஒரு தோற்றம் கண்ணுக்கு ஒன்னும் புலப்படலே. (சே காத்தால எழுந்து பாத்ரூம் கண்ணாடியை துடைக்க வேண்டும் இப்படி ஆன்மிக நெலெம்போது எல்லாம் வந்து தொந்திரவாக இருக்கு) காண்ட்ராக்ட் முடிந்து அடுத்த வேலையை தேடிண்டிருகேன் இப்ப இப்படி ஒரு வாய்ஸ். நன்னாத்தான்  இருக்கு வேளக்கு சாப்பாடு, வலை வசதி, வலையில் உலா என செளகர்யமாத்தான் இருக்கு ஆனா வங்கிக் கணக்குதான் தேஞ்சிண்டே போரது..ஆனா சட்னு ஒன்னு தோனித்து, நல்ல வேள எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழ்லயே சொல்லித்து அந்த குரல். ஸ்வாஹீலி அல்லது ஜெர்மேனிய மொழியில் சொல்லியிருந்தால் இது எனக்கான அசரீரிங்கறது கூட தெரியாம போயிருக்கும், அசரீரி யாரிடமிருந்து வரதோ அவா ரொம்ப நல்லவா. இதை எப்படி இப்ப மத்தவாளுக்கு புரிய வெக்கரது? அசரீரி படி வாழ்க்கையை அமைக்கனும், ஆனா என் கஷ்டம் உங்களுக்கு இப்ப புரியும்னு நெனக்கிறேன்...

விஸ்வரூபம் - சில அனுபங்கள்

இந்த நாவல் வெளி வந்தவுடன் வாங்கி வந்து, மெதுவாக சமீபத்தில்தான் வாசித்தேன். 790 பக்கங்கள். முன்னுரையில் ஒரு வகையில் என் கதையும்தான் என்கிறார் முருகன். கதையில் முருகனை தேடுவது ஒரு சுவாரசியம்.

இந்த பதிவு நாவலின் விமர்சனமல்ல. அந்த தகுதியெல்லாம் எனக்கில்லை, ஆனால் இது வாசிப்பனுவத்தை பற்றியது. புத்தக வாசிப்பு அருகி வரும் இக்காலத்தில் ஏன் படிப்பது அவசியம் என்ற ஒரு அனுபவ பகிர்தல்.

இந்த நாவல் மூன்று தேசங்களில் பயனிக்கிரது. கதாசிரியர் வாழ்ந்த நாடுகள் என்பதை சொல்லத் தேவையில்லை. உதாரணத்துக்கு நாவலில் வரும் எடின்பரோவில் வசித்தவனாதலால் கதையில் வரும் எடின்பரோ நகர வர்ணனைகள் எடின்பரோவை அப்படியே கண் முன் நிறுத்துகிறது.

முருகனின் இழையோடும் நக்கல் நையாண்டி கதையெங்கும் கூடவே அந்த செம்பு போலவே வருகிறது.

என்னை கவர்ந்த ஒன்று அத்தியாயம் 53 காலம் 28 மே 1910 சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை

கதையின் போகிர போக்கில் இப்படி எழுதுகிறாா்:
இந்த நிகழ்வு ஒரு உண்மையில்  நடந்த சரித்திர மற்றும் வானியல் நிகழ்வு. கதையில் குறிப்பிடும் வால் நட்சத்திரம் Haley's comet. கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு அருகே கடந்துசெல்லும்.  கடைசியாக வந்தது 1986ல், மீண்டும் 2061ல் வரும்.  1910ல் இது தோன்றியபோது மக்கள் பல வகையில் பீதியடைந்தது விஞ்ஞானத்தின் வீச்சு பரவலாக இல்லாததால் ஏற்பட்ட பகுத்தறிவு இல்லாத மூடநம்பிக்கைகள் மிகுந்திருந்ததால் வந்த விளைவு என்று புரிந்துகொள்ள முடியும். இதுவே 1986ல் விஞ்ஞானம் பரவலாக வளர்ந்துவிட்ட காரணத்தால் 1910ல் இருந்ததைப்போல் அவ்வளவு பீதியை கிளப்பவில்லை. 

மேலும் ஹேலீஸ் வால் நட்சத்திரம் பற்றிய சுவாரசியமான ஒரு செய்தி  அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் சம்பந்தபட்டது.  இவர் பிறந்த வருடம் 1835 ஹேலீ வால் நட்சத்திரம் தோன்றிய வருடம். சரியாக 75 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த வால் நட்சத்திரம்  தோன்றுவதற்கு ஒரு வருடம் முன்பு, "நான் இந்த வால் நட்சத்திரம் தோன்றியபோது பிறந்தேன், இது மறுபடி அடுத்த வருடம் வருகிறது அப்போது அதனுடனே நானும் செல்வேன் . அப்படி நிகழவில்லை என்றால் அது மிகப்பெரும் ஏமாற்றமாக இருக்கும். கடவுள் சொல்லியிருக்கிறார். சந்தேகமேயில்லை, கணக்கில் கொள்ளவியலாத இரண்டு மனம் போனபோக்கில் உலவும் இந்த இருவரும் சேர்ந்தே வந்ததுபோல் இப்போது சேர்ந்தே செல்லவும் வேண்டும்"  என்று தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் ஆரூடம் சொல்லியிருந்தார்.

என்ன மாதிரியான தீர்க்கதரிசனம், மிகச் சரியாக 1910 ஏப்ரல் மாதம் 21ம் தேதி மாரடைப்பால் இறந்தார்,  வால் நட்சத்திரம் தோன்றிய மறுநாள்!!

விஸ்வரூபம் நாவலில் வரும் ஸ்தூலமாக அலையும் ஆன்மாக்கள் போன்று, ஒருவேளை மார்க் ட்வைன்னும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 1986ல் வந்தபோது கூடவே வந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏனோ குறுகுறுக்கிறது.  முருகனுக்கு நன்றி இப்படி ஒன்றை கதையில் இணைத்து எழுதியதற்கு. வாசிப்பு என்பது இப்படியான அனுவங்களை ஏற்படுத்தக்கூடியது.