மீண்டும் சுனாமியை சுற்றி...

இது சுனாமி முன்னறிவிப்பு பற்றி,

ஏற்கனவே பலரும் இதைப்பற்றி எழுதிவிட்டாலும், சமீபத்திய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. சுனாமி முன்னறிவிப்பு சாதனம் தயாரிக்கும் திட்டதிற்க்காக அண்மையில் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் விவாதித்து இரண்டு வருடங்களில் இதற்க்கான மென்பொருளையும் அதாவது a model, மேலும் வன்பொருளையும் செய்துவிடலாம் என்று ஒர் தீர்மானத்தை கொடுத்துள்ளனர். இது எவ்வாறு சாத்தியம் என்று புரியவில்லை. அமெரிக்காவும் ஜப்பானும், 20 - 30 வருடங்களாக சேகரித்த புள்ளிவிவரங்களை உபயோகித்து சுனாமி முன்னறிவிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

இங்கே என்ன பிரச்சினை என்றால், இந்தியா தானே தனித்து இதனை உருவாக்கிக்கொள்ளும் என்றும் மற்ற நாடுகளின் உதவி தேவை இல்லை என்னும் கொள்கையை இந்த தொழில் நுட்பத்திற்கு கடைபிடிப்பதுதான். இதைப்பற்றி வருத்தப்பட்டு Costas Synolakis என்னும் அமெரிக்க வல்லுனர் Nature, 03/03/2005, Vol. 434 Issue 7029 இதழில் கடிதம் எழுதியுள்ளார்.

சுனாமி முன்னறிவிப்பு என்பது, எல்லை அல்லது வின்வெளி பாதுகாப்போ போன்றது அல்ல. பசிபிக் சுனாமி முன்னறிவிப்பு மையத்திலிருந்து டிசம்பர் 26 அனுப்பப்பட்ட முன்னறிவிப்பு சரியாக கையாளப்படாதது பற்றி யாவரும் அறிந்ததே. வானொலி, தொலைகாட்சி மூலமாக கரையோரம் உள்ளவர்கள் சற்று பாதுகாப்பாக இருக்கவும் என்று ஒரு செய்தி 26ம் தேதி ஒலிபரப்பப்பட்டிருந்தால் குறைந்தது ஒரு 40,000 மக்களை காப்பாற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிரது. இப்படி உயிர்க்காகும் தொழில்நுட்பத்தில் இந்த மாதிரியான கொள்கை தேவைதானா? இந்தியாவின் தன்நம்பிக்கை உயர்ந்ததுதான். இந்தியரின் திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், எதில் தற்ச்சார்பையும் (self-dependent) எதில் கூட்டுறவையும் கடைபிடிப்பது என்பதில் ஒரு நாட்டுக்கு தெளிவான கொள்கை வேண்டும்.

இப்படி ஒரு முடிவெடுப்பதென்பதற்கு என்ன பின்னனி என்று பார்க்கும் போது, சுனாமி நிகழந்த பின் இந்திய அரசு உடனடியாக இந்தியாவில் சேதமடைந்த இடங்களுக்கு உதவி அனுப்பியதோ இல்லையோ, தன் கப்பல் படையை இலங்கைக்கு அனுப்பியது. ஆசியாவில் தான் ஒரு பெரும் வல்லரசு என்று நிருபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. அமெரிக்கா தன் கப்பற்படையை இலங்கை வரை விரிக்க இந்தியா விரும்பவில்லை. இருப்பினும் அமெரிக்கா அனுப்பியதும், என்ன செய்வது என்று கையை பிசைந்து பார்த்துக்கொண்டிருந்ததும் மறைமுகமாக நடந்தேரியது. இதுவே, இந்தியாவின் சுனாமி பாதிப்பை தானே கையாளும், வேற்று நாட்டின் உதவி தேவையற்றது என்று அறிப்பு வெளியிடும் அளவுக்கு சென்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது சுனாமி முன்னறிவிப்பு திட்டதிலும் எதிரொலிக்கிரது. இந்த மார்தட்டலை வரட்டு ஜம்பமாக கொள்வதன்றி வேரென்ன சொல்வது? மக்களின் உயிர்ப்பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இதனை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கருதுகிரேன்.

0 comments: