எடின்புரத்து மக்கள்-2

எடின்பரோ, ஐரோப்பாவில் மிக அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் இடம். வருடத்தின் எந்த நாளிலும் ப்ரின்ஸஸ் தெருவில் போனால் ஆங்காங்கே கையில் காமிராவுடன் எல்லா கோணங்களிலும் படமெடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ட்ராம் போடப்போவதால் (அதெப்படி எங்க ஊர்ல மாத்திரம் ட்ராம் இல்லை எங்களுக்கும் வேணும்னு, நெரிசலை குறைக்கும், மின்சாரத்தில் ஓடுவதால சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது அது இதுன்னு சொல்லி) ஆங்காங்கே தோண்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது. 2010ல் முடிந்துவிடும் என்று எ.ப. கோமகன் சொல்லியிருக்கிறார்.

இந்த நகரத்தில் நான் கவனித்தது, மென்று துப்பிய சூயுங் கம் காலால் மிதிபட்டு நடை பாதையெங்கும் அம்மாவாசை இரவு வானத்து நட்சத்திரம் போல ஆங்காங்கே. இதை மாதிரி நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. டணால் தங்கவேலு சொல்லவது போல் சும்மா நாகூர் ஆடு தள திங்கிர மாதிரி இன்னமா மென்னு துப்பியிருக்காங்கப்பா?

சரி மறுபடி வால்டர் ஸ்காட்க்கு வருவோம். ஸ்காட் ஒரு சிறந்த கவிஞர் மற்றும், சரித்திர நாவல்களின் முன்னோடி. பிறந்தது எடின்பரோவில். போலியோவினால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு கஷ்டப்பட்டிருக்கிறார். ஆரம்ப காலங்களில் வெகுவாக கவிதைகளே எழுதிய ஸ்காட், 1814ல் வேவர்லி என்ற நாவலை யார் எழுதினார்கள் என்று குறிப்பிடாமலே எழுதி வெளியிட்டார். அது மிகப்பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து எழுதி வெளியிட்ட நாவல்களுக்கு "வேவர்லி எழுதிய எழுத்தாளரின் படைப்பு" என்றே பெயரை வெளியிடமலேயே இருந்தார். ஒன்று இரண்டல்ல 14 வருடங்களுக்கு இவர் பெயரே "வேவர்லி எழுதிய எழுத்தாளராகவே இருந்தது. இதுவே எடின்பரோவில் இரயில் நிலையத்துக்கும் பின்பு பெயரானது. போன பதிவில் பார்த்த ஸ்காடின் சிலைக்கு பின்புறம் வேவர்லி ஸ்டேஷன் உள்ளது. அது என்னடா வேவர்லி என்று ஆராய்ந்த போது தெரிந்துகொண்டது.

இன்னுமொரு சுவாரசியமான விஷயமிருக்கிரது. நாமெல்லாம் சின்ன வயதில் படித்த/கேள்விப்பட்ட பிரபலமான ராபர்ட் ப்ரூஸ் என்னும் ஸ்காட்லேண்டு ராசா எப்படி ஆறு முறை தோற்றாலும் தப்பியோடி குகையில் ஒளிந்திருந்த போது ஒரு சிலந்தி மறுபடி மறுபடி வலை பிண்ணி அறுந்து போய் அப்படியும் விடாமல் பத்தாவது முறையாக முயன்று வெற்றிகரமாக வலையை பிண்ணியதை பார்த்து அதுவே ஒரு உத்வேகத்தை கொடுக்க, ப்ரூஸ் ஏழாவது முறையாக இங்கிலாந்து அரசனுடன் போர் புரிந்து வெற்றி பெறுகிறான் என்னும் கதையை கட்டிவிட்டது, சாரி எழுதியது இந்த வால்டர் ஸ்காட். கதையில் பாதிதான் உண்மை. ஆறு முறை தோற்று ஏழாவது முறை வென்றது. குகை, சிலந்தி, இன்பிரேஷன் எல்லாம் ஸ்காட் உபயம். இருந்தாலும் குழந்தைகளுக்கு விடாமுயற்சியை பற்றி சொல்லித்தர மிகச்சிறந்த கதை. இன்றும் போற்றப்படும் ராபர்ட் ப்ரூஸ் ஒருவேளை ஏழாவது முறையும் தோற்றிருந்தால் சரித்திரத்தில் பச்சோந்திக் குணம் படைத்தவன் நண்பனையே காட்டிக்கொடுத்தவன் என தூற்றப்பட்டிருப்பான். Braveheart என்னும் மெல் கிப்சன் நடித்த சினிமாவை பார்த்திருப்பீர்கள். அதில் வில்லியம் வாலஸின் கதையை காட்டியிருப்பார்கள். கொரில்லா போர் முறையில் முதன் முதலில் இங்கிலாந்து மன்னனை வென்றவன். அவனுடைய ஒரு தளபதியாக இருந்தவனே ராபர்ட். பின்பு அரசனாகும் ஆசையால் வில்லியம் பிடி படப்போவது தெரிந்தும் அவனனை காப்பாற்றாமல் இருந்துவிட்டான். வில்லியமிடமிருந்து கற்ற போர் தந்திரங்களை ஆறு முறை தப்பு தப்பாக கடைபிடித்து பின்பு ஒரு வழியாக ஏழாவது முறை வில்லியம் முதன் முதலாக வென்ற இடத்திலேயே இவனும் போரினை வென்றான் என்பதுதான் உண்மையான சரித்திரம். ராபர்டை விட பிரமிக்க தக்க வீரம் கொண்ட வில்லியம் பற்றி ஏனோ அவ்வளவாக வெளி உலகில் தெரியவில்லை. எடின்பரோவிலிருந்து சுமார் ஒரு மணிநேர பயண தூரத்திலிருக்கிறது வில்லியம் வாலஸ் மெமொரியல் (படம்).



கட், இப்போது ப்ரின்ஸஸ் தெருவுக்கு வருவோம், அப்படியே அங்கிருந்து தெற்கு பக்கமாக நடந்தால் அடுத்த புகழ் பெற்ற கவிஞரான ஆலன் ராம்சேயின் சிலை. ஸ்காட்டுக்கும் முன்னோடி. அவருக்கு பின்னால் தெரிவது புகழ்மிக்க எடின்பரோ கோட்டை.


அப்படியே இன்னும் கொஞ்சம் நடந்தால் வலி தெரியாமல் அறுவை சிகிச்சை செய்ய அனஸ்தீசியா என்னும் முறையில் க்ளோரோஃபார்மை உபயோகிக்கலாம் என்று உலகுக்கு காட்டி அதுவரை ஈதர் என்னும் இரசாயனத்தை உபயோகித்து வந்ததை மாற்றிய ஜேம்ஸ் யங் சிம்சன் என்னும் ஒரு மருத்துவரது சிலையை பார்க்கலாம்.



மிக தைரியமாக தனக்குதானே சோதனை செய்து மயங்கி விழுந்து க்ளோரோஃபார்ம் சிறந்தது என கண்டுபிடித்தார். சற்று அளவு கூடியிருந்தால் உயிருக்கே ஆபத்தானதாக இருக்கும். முதன் முதலில் பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க க்ளோரோஃபார்மை உபயோகித்தவரும் இவரே. வழக்கம் போல் மத குருக்களால் இதை பொறுக்க முடியவில்லை. அவர்கள் வாதம் இப்படி பிரசவத்தின் போது நினைவில்லாது குழந்தை பிறந்தால் சாத்தான் தான் வந்து பிறக்கும் என இவருக்கு ஒரே தடைகள். அதையெல்லாம் எதிர்த்து போராடியிருக்கிறார். பின்பு 1853ல் விக்டோரியா மகாராணியின் பிரசவதின் போது இதை உபயோகித்ததால் எல்லா எதிர்ப்பும் சத்தமில்லாமல் அடங்கிவிட்டது.




மொக்கை:

நம்ம ஊர்ல மாடு சரியா பால் கறக்கனும்னா கன்னுகுட்டிய விடுவோம், இல்ல வைக்க அடச்ச பொம்மய வெச்சு ஏமாத்துவோம், இல்ல நாலு சாத்து சாத்துவோம் . ஆனா இங்கிட்டு நம்ம ராட் டவர்னர்ங்கர பால்காரர் சீன முறையான தா(டா)ய் சீ (tai chi)ய அவர் பண்ணேல இருக்குற மாட்டுக்கு முன்னால இவரு பண்ணினா மாடுங்கள்ல்லாம் அப்படியே ரிலாக்ஸ்டாயி லிட்டர் லிட்டரா கறக்குதாம். காலேல எழுந்து மாடுங்க முன்னாடி இவர் தாய் சீ பண்ண பண்ண இவரு மூடு அப்படியே மாடுங்களுக்கு தொத்திக்குதாம். சிரிக்காதீங்க. ரொம்ம சீரியஸா சொல்லியிருக்காரு வேணுமின்னா படத்துல பாருங்க:

Souce: Metro

இந்த மாட்டுப் பால்லர்ந்து பண்ணுற சீஸுக்கு பெயர் : தாய் சீஸ்-ன்னு வெக்கலாம். நம்ம வைகை புயல, போக்கிரி கெட்டப்புல வெச்சு ஒரு சீன் நெனச்சு பாருங்க. சாமி, இவிங்கள மாதிரி அளுங்கதான் நம்ம கோடம்பாக்கத்து கோமாளிகளுக்கு நல்ல இன்ஸ்பிரேசனா இருக்காய்ங்கப்பா.

டி.கெ: இதில ராட் என்ற பால்காரருக்கு எந்தவித்திலும் உ.கு இல்லை.

5 comments:

துளசி கோபால் said...

பால்காரருக்குச் சிலை வைக்கலையா இன்னும்? :-)))))

இவுங்கதான் காரணமோ நம்மூர்களில் சிலையான சிலைகள் வைக்கும் ஆட்சிகளுக்கு!!!

கிவியன் said...

பால்காரர்தான் அமெரிக்காவில செட்டில் ஆகிட்டாரே அப்புறம் எப்படி எ.பல சிலை வெக்கிறது. மேடம் டுஸாது மெழுகு சிலை வேணா வெக்கலாம்.

Anonymous said...

ஆடற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடற மாட்டை பாடித்தான் கறக்கணும். உங்க பதிவுல இருக்க மத்த விஷயங்கள விட இதுதான் எல்லாரையும் புடிச்சு இழுக்குது பாருங்க‌

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்களும் சுத்திப்பாத்தாப்பல இருக்கு.. மொக்கை பகுதி நல்லாருக்கு :)

நெல்லை சிவா said...

தலைவரே..

அடுத்த மாசம் அங்க வராலாம்னு இருக்கேன்..என்ன என்ன இடமெல்லாம் பார்க்கணும், எங்க தங்கலாம்னுங்கிற குறிப்பெல்லாம் குடுங்க..