விஷயமே இல்லாம எழுதுவது எப்படி? இல்லாவிட்டால் ஏன் வலைப்பதிவு எழுதவேண்டும். ஒரு சிலரை தவிர மற்ற எல்லோருடையதும் டையரி குறிப்புகள்தான். சரி அடுத்தவரின் இந்த சொந்த கருத்துக்களை படித்து என்னவாகப்போகிறது? ஒத்துப்போனால் ஜால்ரா அடிக்கலாம் இல்லாவிட்டால் கயிதே கஸ்மாலம் என இறங்கிவிடலாம் இது இரண்டுமில்லை என்றால் ஜல்லிஅடிக்கலாம். ஆனால் பதிவெழுதாவிட்டால் பாயை பிராண்டும் பதிவர்கள் பலர் சொல்லும் காரணங்கள்: (எஸ் ராமகிருஷ்ணனின் வலைபக்கத்தில் பொதுவாக எழுதுவது ஏன் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறார் அதிலிருந்தும் சில காரணங்கள்) குறிப்பாக இந்த காரணங்கள் அத்தனையும் வலைபதிவர்களுக்கு பொருந்தும்:
1. எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்
2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.
3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க
4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த
5) வேதனையிலிருந்து விடுதலை அடைய
6) புகழ்பெற
7) பணக்காரன் ஆக
8) உலகை செம்மைபடுத்த
9) பழக்கத்தின் காரணமாக
10) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது
11) பெண்நண்பர்கள் பெறுவதற்காக
12)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற
13) பதவி உயர்விற்காக எழுதுவது.
14) சினிமாவிற்குள் நுழைவதற்கு ( !!?? இது எஸ்.ரா வின் கருத்து)
15) ஒய்வு பெற்ற ஏதாவது செய்யவேண்டுமென என்று
16) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்
17) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது
18) தற்பெருமைக்காக (ego gratification)
19) தன்னை தனித்து காட்டுவதற்காக
20)புடுங்க ஆணி, தட்ட பெட்டி எதுவுமில்லாததால்
21)என்னவோ ஆரம்பிச்சிடேன் நிப்பாடா முடிலீங்க..
ஆக யாரும் தப்பிக்க முடியாது இந்த 21 காரணங்கள்ள நீங்க இதுல எது என்பது அவரவர்க்கு வெளிச்சம்.
எனினும் வலைபதிவு வந்த பின் இதுவரை, கையெழுத்து, காசோலை, வேலைக்கான கடிதம், தபாலில் முகவரி ஆங்காங்கே விண்ணப்ப படிவங்கள் என இதைத் தாண்டிஎதுவுமே எழுதாத (என்னை மாதிரி) ஆயிரக்கணக்கானோர் எழுத தொடங்கியது மிக நல்ல மாற்றம். பல நட்புக்களை ஏற்படுத்தி, வெளியே தெரியாதிருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து, பலருக்கு இது கிட்டதட்ட ஒரு சிறந்த பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. இந்த இடத்தில் பதிவு எப்படி எழுதக்கூடாது என்று சொல்வதை விட பதிவை எப்படி எழுதலாம் என சொன்னால் உபயோகமாக இருக்கும்.
வெற்றிகரமாக் எழுதுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க முடியாது ஆனால் கொடுமையாக எழுதுவதை தவிர்க்கலாம்.
எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதாலாம், உதாரணத்துக்கு, "இன்று எனக்கு மனச்சோர்வு அதிகமாக உள்ளது" என்றால் எலி அம்மணமாக ஓடுது என்பது போல்தான். வாசகர் உங்கள் கதையை கேட்பதில் ஆர்வமாக உள்ளனர் ஆனால் வெறும் செய்திமாதிரி சொன்னால் அதன் சுவாரசியம் போய்விடும். இன்று எனக்கு மனச்சோர்வு, அதனால் பாருங்கள் என அறைக்குள் வீசம் வாசம் கூட பிடிக்கவில்லை, ஏன்? குளிக்கவுமில்லை, ஏன்? எதனால் மனச்சோர்வு என படிக்கும் வாசகனை சுவாரசியமாக்கும் நுட்பமான விவரனை எழுத பழகுங்கள். கவனம் அதற்காக கொஞ்சம் ஓவராக போயி மூக்குறிஞ்சி, எங்க நம்ம மேல தடவிடப்போறார்னு வாசகன் பயந்து ஒடற மாதிரி வேண்டாம்.
நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் நல்லது. எதுவுமே தமாஷ்தான். உணவர்வுபூர்வமான ஒன்றையோ இல்லை மிக கறாரான விஷயத்தையோ நகைச்சுவையாக சொல்லலாம், இதனால் தப்பில்லை. அதே சமயம் ஒரு விஷயம் நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் அது சாதாரணமானது என்றும் ஒதுக்கித்தள்ள முடியாது. உதாரணத்துக்கு: மனச்சோர்வு மிக அதிகமாகி
தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, எது சிறந்த வழி என்பது தெரியவில்லையாதலால் நூலகத்துக்குச் சென்று "வெற்றிகரமாக தற்கொலை செய்து கொள்வது எப்படி" என்ற ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு இரவல் வாங்க லைப்பரரியனிடம் கொடுத்த போது " சரி, யார் வந்து இதை ரிட்டன் பண்ணுவார்கள்" என்று ரொம்ப அக்கறையாக கேட்டார். (நன்றி இரா. முருகன்).
தடித்த தோல் இருப்பது நலம். உங்களை சீண்டி பின்னூட்டம் வந்து அதற்காக கோபித்துக்கொண்டு அதை வீட்டில் எல்லோரிடமும் காண்பிக்கும் அளவுக்கெல்லாம் போகாதீர்கள். குறை சொல்பவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். அடுத்த பதிவ பத்திஞ்சிட்டு போய்ட்டே இருக்கனும். சரியான காரணமா இருந்தா பதில் சொல்வது உங்க கடைமை மத்தத கண்டுக்க கூடாது. பி கூல்.
தினமும் இல்லாவிட்டாலும் வாரம், இல்லை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து எழுத வேண்டும். என்னை மாதிரி அப்ஸ்காண்ட் ஆகக் கூடாது.
ப்ளஜ்ஜியரிசத்தை அதாவது சுடுவது தவிர்த்தல் நல்லது. வலையில் இல்லாதது இல்லை. ஒரு முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிகையே எழுதுமளவுக்கு விஷயமிருக்கிறது. ஒரு விஷயத்தை படித்து அதை உங்கள் கண்ணோட்டத்தில் சொல்லலாம் முடிந்தவரை குறிப்பு, சுட்டி கொடுப்பது சிறந்தது. என் பள்ளிக்கூட தமிழ் ஆசிரியை பரிட்சையின் போது காப்பி அடித்தால் "அடுத்தவன் வாந்தி எடுத்தத திங்கிறான் பாரு" என்று கடிந்து கொள்வார். உங்களுக்கு அது ஆனந்தமாக இருக்கிறது என்றால் தடையேதுமில்லை. உங்கள் விருப்பம்.
வலைப்பதிவு ஆரம்ப காலங்களில் உங்கள் ரெப்ரிஜிரேட்டரின் கீழ் பூஞ்சை பிடித்துவிட்டது என எழுதியபோது நூற்றுக்கணக்கில் பார்வையிட்டிருப்பார்கள், ஆனால் இன்று நீங்கள் எவ்வளவு நன்றாக எழுதினாலும் ஏதோ வெளி மண்டலத்தில் சவுண்ட் விடுறமாதிரி ஆகிருச்சு. ஒரு பெரிய வாசகர் வட்டத்தை எதிர்பார்த்து எழுதினால் உங்க ஆசை உடனடியாக ஃப்யுசாகிவிடும். நீங்கள் எழுதுவதை உங்களாலேயே முதலில் ரசிக்க முடிந்தால்தான் அடுத்தவரை பற்றி நீங்கள் கொஞ்சம் எதிர்பார்கலாம்.
மொக்கை பகுதி:மார்ச் இறுதியில் ராணியம்மா ஹீத்ரோவின் டெர்மினல் 5 திறந்து வெச்சாங்க. இரண்டு நாட்கள் கழித்து பொது மக்களுக்கு திறந்து விட்டாங்க. இன்னிக்கி வரைக்கும் எக்க சக்க பிரச்சனைகள். இங்கிருக்கும் ஊடகங்களுக்கு ஒரே கொண்டாட்டம். அக்கு வேறு ஆணி வேராக பிரிச்சு மேஞ்சுகிட்டு இருக்காங்க. 30,000 பெட்டிகள் மலை போல் குவிந்துள்ளன. இன்னும் அதனது சொந்தக்காரர்களை போய் சேரவில்லை. இன்றய செய்திப்படி பெட்டிகள் போய் சேருவது மிக கடினம் என கூறுகிறார்கள். ஆனா இதுல கஷ்டப்படரது பிரயாணிகள்தான்.
கீழே உள்ள படத்தில் பாருங்கள் பெட்டிக்குள் உறங்கும் பிரயானிகள்.
இதை வைத்து வெளியான கார்டூன்:
.